(குந்தவை ராஜ ராஜ சோழனின் தமக்கை...
வந்தியத்தேவன் சோழப் படைத்தளபதி...
இருவரும் காதல் கொண்டு மணந்தனர்...
மனமொன்றிய காதலை மற்றவரறிய சொல்லிக்கொள்ளவில்லை...)
கவிதை அரங்கேறும் நேரம்:
----------------------------------------------------------------------
இளவரசி பல்லக்கில் இருக்கிறாள்...
இவன் குதிரையில் காவலாய் வருகிறான்....
இதயம் இரண்டும் பேசுகின்றன,
இறைவன் கோவில் செல்லும் வழியில்...
-----------------------------------------------------------------------
பல்லக்கில் செல்வதென்ன?
பால்வண்ண பைங்கிளியோ...
பாவையுந்தன் மேனியது
பகலிலும் வரும் நிலவோ?
நிலவென்னய்யா?
நிதம் தேயும் வளரும்...
நானும் நீயும்
வானும் நீலமன்றோ....
நீலமே நீயானால்
நீள்கடலுக்கும் உரித்தாவாய்
உடலின் உதிரமென்பேன் - உன்
உயிரில் உயிர்கரைவேன்...
கரைந்துபோனால், நான்
கலங்கிப் போகேனோ... உயிர்
கலந்து கரைசேர்வோம், கவலை
மறந்து விண்சேர்வோம்....
விண்சேர்ந்தென்ன செய்ய?
கண் சேராது போனபின்....
மண் புதைந்து போவேன் - இந்த
பெண் சேராது போயின்...
போனதும் வந்ததும்
போய்சேர்ந்த தடமெங்கே?
பொய்யறியா பெண்ணிவளை - நீ
விட்டுசென்ற இடமெங்கே?
இடமொன்று தடையிலை
இனியவளே உனைச்சேர
இப்போழ்தே இணைவோம்
இறைவனவன் சந்நிதியில்...
(கோவில் அடைகின்றனர்)
Disclaimer:
This website and its content is copyright of Uma Manoraj - © [2010].
All rights reserved.